வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய தொல்மாந்தர் தாங்கள் பார்த்தவற்றை நினைவுபடுத்திக்கொள்ளவும், தங்கள் எதிரில் இல்லாதவர்க்குக் காலம் இடம் கடந்து செய்தி தரவும் படங்கள், குறியீடுகள் ஆகியவற்றைத் தாங்கள் தங்கியிருந்த குகைப்பாறைகளில் வரைந்தனர். இத்தகைய பாறை ஓவியங்களே எழுத்துகளுக்கு அடித்தளங்களாயின. எழுத்துகள் கிடைத்த காலத்திலிருந்துதான் வரலாறு தொடங்குகிறது என அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள்.